Friday 24 January 2014

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நடால் வெற்றி..!


மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ரஃபேல் நடால் உள்ளங்கை காயத்தை பொருட்படுத்தாது அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று மெல்பர்ன் நகரின், ராட் லெவர் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரர், ஸ்பெயினின், ரஃபேல் நடாலை எதிர்த்து ஆறாம் நிலை வீரர், ஸ்விட்சர்லாந்தின், ரோஜர் ஃபெடரர் களமிறங்கினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்போட்டி இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் 33ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெற்ற 32 போட்டிகளில் நடால் 22 முறை வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த முறை ரஃபேல் நடாலின் இடது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டிருந்ததால் ரோஜர் பெடரரே வெல்வார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. "இந்த காயம் இப்படியே இருந்தால் இறுதி ஆட்டத்தில் ஆடுவது கனவே" என நடால் போட்டிக்கு முன்னர் தெரிவித்திருந்திருந்ததும் ஃபெடரர் வெல்வார் என்ற நம்பிக்கையை அதிகரித்திருந்தது. ரஃபேல் நடால் இடது கை ஆட்டக்காரர் என்பதால் இந்தகாயம் மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
நடால் கையில் ஏற்பட்ட காயம்..
ஆனால் இந்த தடைகளை எல்லாம் துச்சமென நினைத்து.. மனதில் உறுதியுடன் களமிறங்கிய நடால் முதல் ஆட்டத்தை 7-6 என்ற புள்ளிகளில் போராடி வென்றார். இரண்டாவது ஆட்டத்தின் பாதியில் அவர் உள்ளங்கை கட்டு அவிழ்ந்துவிட , கையில் ரத்தம் கசிந்தது. மீண்டும் காயத்திற்க்கு மருந்திட மருந்துவ இடைவெளி கொடுக்கப்பட்டது, புதிய கட்டுடன்  ஆட வந்த நடால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஜர் ஃபெடரரும் தனது முன்கை ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கவே.. ஆட்டம் சூடு பிடித்தது.

ஃபெடரரின் முன் கை ஆட்டத்திற்கு நடால் வாய்ப்பு வழங்காமல், ஃபெடரரின் இடது கை பக்கமாகவே பந்தை அனுப்பியதும், இரண்டு மூலைகளிலும் அளவெடுத்து அடிப்பது போல மிகச்சரியாக பந்தை திருப்பி அனுப்பியதும் நடாலின் அனுபவத்தைக்காட்டியது. இதன்மூலம் இரண்டாவது ஆட்டத்தை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் நடால் வென்றார்.

மூன்றாவது ஆட்டத்தை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் ஃபெடரரும், இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்புக்காக நடாலும் களமிறங்க, ஆட்டம் மீண்டும் விறுவிறுப்பு  அடைந்தது.

ஒருவொருக்கொருவர் சளைக்காமல் ஆடினாலும் ரஃபேல் நடால்  மூன்றாவது ஆட்டத்தையும் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

இது அவருடைய உடல் பலத்தைவிட, அனுபவத்தைவிட, மனபலத்திற்க்கு கிடைத்த வெற்றி எனில் அது மிகையில்லை. 

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நடால், ஃபெடரர் மோதல்.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப்போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் ரோஜர் ஃபெடரரும்  ரஃபேல் நடாலும் மோத இருக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பரம வைரிகள் மீண்டும் களம் காணுகின்றனர். இவர்களுக்கிடையில் இதுவரை நடந்த 32 போட்டிகளில் நடால் 22 போட்டிகளில் வென்றிருக்கிறார்.

இந்த அரையிறுதி ஆட்டமும் மற்றுமோர் சிறந்த ஆட்டமாக இருக்கப்போகிறது என்பதில் ஐயமில்லை. எனினும், 2007 - 2010 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இருவரும் ஆடிய வேகமும், ஆட்டத்திறனும் இப்போது இருக்கிறதா? என்பது கேள்விக்குறிதான்

இதற்கு காரணம் நடாலின் இடது உள்ளங்கையில் ஏற்பட்டுள்ள காயமும், ஃபெடரரின் அண்மைய ஆட்டங்களும். ஃபெடரர் மீண்டும் தனது முன் கை ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியதை கடந்த ஆட்டங்களில் பார்க்க முடிந்தது.

அதே வேளையில், தன்கையில் காயம் இருப்பது தனது கவனத்தை சிதைக்கிறது என்றும், காயம் தொடர்ந்து இருக்குமாயின் இறுதி ஆட்டம் ஒரு கனவாகிவிடும் என்று நடால் கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஒருவரை ஒருவர் வீழ்த்த என்ன வியூகம் வகுக்கப்போகின்றனர், இருவரின் ஆட்டமுறையும் எந்த விதத்தில் வேறுபடப்போகிறது, யாருக்கு எது பலம், எது பலவீனம் என்ற கேள்விகளுக்கிடையில் இருவரின் வயதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதையும் தவிர்க்க முடியாததாகிறது.

இவர்கள் இருவரும் கடந்தகாலங்களின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்றாலும்.. பல முன்னனி வீராங்கனைகளை மண்ணைக்கவ்வ வைத்த கனடாவின் 19 வயது யூஜெனி புட்சர்டும், முன்னனி வீரர்களை வீழ்த்தி, முதல் முறையாக க்ராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் இறுதிப்போட்டியில் களம் காணும் வாவ்ரின்காவும், பல புதிய கேள்விகளை நம்முள் எழுப்புகிறார்கள்.

எது எப்படியோ! மற்றுமொரு கண்ணுக்கு விருந்தளிக்கும் அற்புதமான அரையிறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக