ஜோகர் பக்ரு: பாகிஸ்தானுக்கு எதிரான சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி (21 வயது) லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளை வீழ்த்திய இந்தியா, "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
மலேசியாவில் உள்ள ஜோகர் பக்ரு நகரில், 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3வது சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, இந்தியா, இங்கிலாந்து, தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.
முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு 38வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பில் சுக்மன்ஜித் சிங், முதல் கோல் அடித்தார். பின், 45வது நிமிடத்தில் இந்திய வீரர் இம்ரான் கான், "பீல்டு' கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 46வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில், சுக்மன்ஜித் சிங், இரண்டாவது கோல் அடித்தார். பின், 61வது நிமிடத்தில் இந்தியாவின் ராமன்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய பாகிஸ்தான் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
இதுவரை விளையாடிய மூன்று லீக் போட்டிகளில் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் தலா 9 புள்ளிகளுடன் மலேசியா, இந்தியா அணிகள் உள்ளன. பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தலா ஒரு புள்ளியுடன் அர்ஜென்டினா, தென் கொரியா அணிகள் உள்ளன. மூன்று போட்டியிலும் தோல்வி கண்ட இங்கிலாந்து அணி 6வது இடத்தில் உள்ளது.
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக