டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து வெற்றி பெற்றார்.
ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இளம் இந்திய வீராங்கனையான சிந்து, ஜப்பானின் யூகினோ நாகாயை சந்தித்தார். முதல் செட்டை சிந்து 21-12 என வென்றார். இரண்டாவது செட்டை 21-13 என சுலபமாக கைப்பற்றினார்.
முடிவில், சிந்து 21-12, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி லாட், ஜப்பானின் ஷயாகாவிடம், 15-21, 10-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.
அஜய் ஜெயராம் அசத்தல்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம், சீன தைபேவின் தின் சென் சூவை 21-11, 21-18 என்ற நேர்செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டிகளில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் சாவ் ஷசாக்கியை 22-20, 22-24, 21-18 என்ற செட்களில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவின் ஆனந்த் பவார், இந்தோனேஷியாவின் சோனி குன்கோராவை 21-17, 7-21, 21-18 என்ற செட்களில் வென்றார். இந்திய வீரர் பிரனாய், ஹாங்காங்கின் விங் கீ வாங்கை 15-21, 21-17, 24-22 என்ற செட்களில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தியாவின் சாய் பிரனீத், ஹாங்காங்கின் யுன் ஹூவிடம், 21-23, 18-21 என போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் சவுரவ் வர்மா, ஜப்பானின் ஜுன் தகிமுராவிடம் 24-22, 19-21, 14-21 என்ற செட்களில் வீழ்ந்தார்.
சுமித் ஜோடி அபாரம்:
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித், மானு அட்ரி ஜோடி, ஜப்பானின் ஹிரோயூகி, ரொயோடா ஜோடியை 21-17, 21-15 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக