ஜொஹார் பாரு, மலேசியா: இந்திய இளையோர் அணி,ஜொஹார் பாரு சுல்தான் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.
சுற்றுப்போட்டிகளில் தோல்வியே அடையாமல் சிறப்பாக விளையாடிவிட்டு, இறுதிப்போட்டியில் தோற்றுப்போனது இந்தியா.
ஜெர்மனியின் ஜொனஸ் கொமால் ஆட்டத்தின் பதினோராவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். பின்னர் 24 வது நிமிடத்தில் இந்தியாவின் சத்பீர் சிங் ஒரு கள கோல் அடித்து அதனை சமன் செய்தார். பின்னர் 30 ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜொசுவா டெலர்பெர் பெனல்டி கார்னர் மூலம் மற்றொரு கோல் அடித்து 2-1 என்ற முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெர்மனி ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து 3-1 என்று முன்னிலை பெற்றது. இந்த முறை கோல் அடித்தவர் ஜெர்மனியின் ஃப்ளோரியன் அட்ரியன்ஸ்.
பின்னர் ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த போது, இந்தியாவின் ஆகாஷ் தீப் ஒரு கோல் அடித்து 3-2 என்று முன்னிலையை குறைத்தாலும், அது வெற்றிக்கோ அல்லது கூடுதல் நேரம் பெறுவதற்க்கோ உதவவில்லை.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு நடைப்பெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது.
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக