Thursday 26 September 2013

ஹாக்கி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி :பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்

ஜோகர் பக்ரு: பாகிஸ்தானுக்கு எதிரான சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி (21 வயது) லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளை வீழ்த்திய இந்தியா, "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
மலேசியாவில் உள்ள ஜோகர் பக்ரு நகரில், 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3வது சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, இந்தியா, இங்கிலாந்து, தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.
முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு 38வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பில் சுக்மன்ஜித் சிங், முதல் கோல் அடித்தார். பின், 45வது நிமிடத்தில் இந்திய வீரர் இம்ரான் கான், "பீல்டு' கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 46வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில், சுக்மன்ஜித் சிங், இரண்டாவது கோல் அடித்தார். பின், 61வது நிமிடத்தில் இந்தியாவின் ராமன்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய பாகிஸ்தான் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
இதுவரை விளையாடிய மூன்று லீக் போட்டிகளில் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் தலா 9 புள்ளிகளுடன் மலேசியா, இந்தியா அணிகள் உள்ளன. பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தலா ஒரு புள்ளியுடன் அர்ஜென்டினா, தென் கொரியா அணிகள் உள்ளன. மூன்று போட்டியிலும் தோல்வி கண்ட இங்கிலாந்து அணி 6வது இடத்தில் உள்ளது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

பாட்மின்டன்: சிந்து அவுட்: காலிறுதியில் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஆண்கள் பிரிவு காலிறுதிக்கு, இந்தியாவின் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம் முன்னேறினர்.
ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் சிந்து, ஜப்பானின் அகேன் யமகுசியை சந்தித்தார். 32 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், சிந்து 6-21, 17-21 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 
காலிறுதியில் ஜெயராம்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் அஜய் ஜெயராம், ஜப்பானின் யூசி லெகிடாவை 21-13, 11-21, 21-18 என்ற செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கோஜயை 21-12, 21-16 என்ற செட்களில் வென்று, காலிறுதிக்கு முன்னேறினார். பிரணாய், டென்மார்க்கின் ஜார்ஜென்சனை 21-14, 13-21, 21-17 என்ற செட்களில் வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
சுமீத் ஜோடி தோல்வி:
ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுமீத், மானு அட்ரி ஜோடி, சீனாவின் லியு, குயு ஜிகான் ஜோடியிடம், 17-21, 15-21 என வீழ்ந்தது.
தரவரிசை:
பாட்மின்டன் போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை, உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து 10வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல், 4வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆண்கள் ஒற்றையரில், இந்தியாவின் காஷ்யப், ஒரு இடம் பின்தங்கி 14வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான குருசாய்தத் (23வது இடம்), அஜய் ஜெயராம் (30வது), சவுரப் வர்மா (46வது) ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர். ஆனந்த் பவார் (37வது), சாய் பிரனீத் (38வது), ஸ்ரீகாந்த் (39வது) ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு இரட்டையரில் "டாப்-25' வரிசையில் ஒரு இந்தியர் கூட இடம் பெறவில்லை. சமீபத்தில் முடிந்த முதலாவது இந்தியன் பாட்மின்டன் லீக் (ஐ.பி.எல்.,) தொடருக்கு பின், இந்திய நட்சத்திரங்கள் சீன தைபே மற்றும் சீனாவில் நடந்த போட்டிகளை புறக்கணித்ததால், பின்னடைவை சந்தித்தனர்.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Wednesday 25 September 2013

சிந்து அசத்தல் வெற்றி

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து வெற்றி பெற்றார்.
ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இளம் இந்திய வீராங்கனையான சிந்து, ஜப்பானின் யூகினோ நாகாயை சந்தித்தார். முதல் செட்டை சிந்து 21-12 என வென்றார். இரண்டாவது செட்டை 21-13 என சுலபமாக கைப்பற்றினார். 
முடிவில், சிந்து 21-12, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 
மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி லாட், ஜப்பானின் ஷயாகாவிடம், 15-21, 10-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். 
அஜய் ஜெயராம் அசத்தல்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம், சீன தைபேவின் தின் சென் சூவை 21-11, 21-18 என்ற நேர்செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 
மற்றொரு போட்டிகளில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் சாவ் ஷசாக்கியை 22-20, 22-24, 21-18 என்ற செட்களில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவின் ஆனந்த் பவார், இந்தோனேஷியாவின் சோனி குன்கோராவை 21-17, 7-21, 21-18 என்ற செட்களில் வென்றார். இந்திய வீரர் பிரனாய், ஹாங்காங்கின் விங் கீ வாங்கை 15-21, 21-17, 24-22 என்ற செட்களில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
 இந்தியாவின் சாய் பிரனீத், ஹாங்காங்கின் யுன் ஹூவிடம், 21-23, 18-21 என போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் சவுரவ் வர்மா, ஜப்பானின் ஜுன் தகிமுராவிடம் 24-22, 19-21, 14-21 என்ற செட்களில் வீழ்ந்தார். 
சுமித் ஜோடி அபாரம்: 
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித், மானு அட்ரி ஜோடி, ஜப்பானின் ஹிரோயூகி, ரொயோடா ஜோடியை 21-17, 21-15 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக


சிந்துவுக்கு அர்ஜுனா விருது

புதுடில்லி: சிந்துவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
இந்திய பாட்மின்டன் அணியின் இளம் வீராங்கனை சிந்து, 18. சமீபத்தில் குவாங்சுவில் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றார். இதை பாராட்டும்விதமாக, அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றார். கடந்த ஆக., 31ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (ஆக., 31) இவ்விருதுகளை வழங்கினார். ஆனால், இந்தியன் பாட்மின்டன் லீக் தொடர் பைனலில் விளையாடியதால் சிந்துவால் பங்கேற்க முடியவில்லை. நேற்று இந்திய விளையாட்டு ஆணைய கூட்டத்தில் (எஸ்.ஏ.ஐ.,) இவருக்கு அர்ஜுனா விருது தரப்பட்டது. அப்போது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்தார்.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

காலிறுதியில் சானியா ஜோடி

டோக்கியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி முன்னேறியது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, பிரான்சின் கிறிஸ்டினா, இத்தாலியின் பிளேவியா ஜோடியை எதிர் கொண்டது. இதில் முதல் செட்டை 2-6 என இழந்த சானியா ஜோடி, அடுத்த செட்டை 6-0 என கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் "சூப்பர்- டை பிரேக்கரில்' சானியா ஜோடி 10-7 என வென்றது. முடிவில், சானியா, காரா பிளாக் ஜோடி 2-6, 6-0, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

பூபதி ஜோடி ஏமாற்றம்

பாங்காங்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் பூபதி, சுவீடனின் ராபர்ட் ஜோடி தோல்வியடைந்தது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பூபதி, சுவீடனின் ராபர்ட் ஜோடி, ஸ்பெயினின் டேனியல், இத்தாலியின் பாலோ ஜோடியை சந்தித்தது. இதில் முதல் செட்டை 6-2 என கைப்பற்றி பூபதி ஜோடி, இரண்டாவது செட்டை 3-6 என பறிகொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி "சூப்பர்- டை பிரேக்கருக்கு' சென்றது. இதில் போராடிய பூபதி ஜோடி 8-10 என இழந்தது. முடிவில் பூபதி, ராபர்ட் ஜோடி 6-2, 3-6, 8-10 என தோல்வியடைந்தது.

- இராசேந்திர உடையார
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக