ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், ஆனந்த் பவார் மற்றும் அரவிந்த் பட் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஜெர்மனியின் மயூல்ஹிம் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன. போட்டித் தரவரிசையில் 10-ம் இடத்தில் உள்ள ஜெயராம் 21-12, 21-18 என்ற செட்களில் பிரான்ஸின் பிரைஸ் லீவெர்டெûஸ வீழ்த்தினார். இந்த ஆட்டத்தை அரை மணி நேரத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வந்தார் ஜெயராம்.
மற்றொரு ஆட்டத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆனந்த் பவார் 22-10, 16-21, 21-16 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் மைக்கேல் லான்ஸ்டெயினரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல, பெங்களூரைச் சேர்ந்த அரவிந்த் 21-17, 21-15 என்ற நேர் செட்களில் சக நாட்டவரான அனுப் ஸ்ரீதரை வீழ்த்தினார்.
இந்தியாவின் மற்றொரு வீரரான குருசாய்தத், சீன வீரர் பின் கியோவிடம் தோல்வி கண்டார்.
இப்போட்டியின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்திய ஜோடியான அருண் விஷ்ணு மற்றும் அபர்ணா பாலன் 21-15, 21-10 என்ற கணக்கில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தருண் கோனா ஜோடி 23-25, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த ரிக்கி விதன்டோ மற்றும் பஸ்பிதா ரிச்சி திலி ஜோடியை வீழ்த்தியது. இந்திய ஜோடி, முதல் செட்டை இழந்து பின்னும், அடுத்த இரு செட்களை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி, தங்களது அடுத்த சுற்றில் இங்கிலாந்து ஜோடியை சந்திக்கிறது.
கலப்பு இரட்டையர் வெற்றியைத் தொடர்ந்து மகளிர் இரட்டையர் பிரிவிலும் அஸ்வினி ஜோடி வெற்றி பெற்றது.
- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக