Thursday 28 February 2013

ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்றில் ஜெயராம், ஆனந்த்

ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், ஆனந்த் பவார் மற்றும் அரவிந்த் பட் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஜெர்மனியின் மயூல்ஹிம் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன. போட்டித் தரவரிசையில் 10-ம் இடத்தில் உள்ள ஜெயராம் 21-12, 21-18 என்ற செட்களில் பிரான்ஸின் பிரைஸ் லீவெர்டெûஸ வீழ்த்தினார். இந்த ஆட்டத்தை அரை மணி நேரத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வந்தார் ஜெயராம்.

மற்றொரு ஆட்டத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆனந்த் பவார் 22-10, 16-21, 21-16 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் மைக்கேல் லான்ஸ்டெயினரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல, பெங்களூரைச் சேர்ந்த அரவிந்த் 21-17, 21-15 என்ற நேர் செட்களில் சக நாட்டவரான அனுப் ஸ்ரீதரை வீழ்த்தினார்.

இந்தியாவின் மற்றொரு வீரரான குருசாய்தத், சீன வீரர் பின் கியோவிடம் தோல்வி கண்டார்.

இப்போட்டியின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்திய ஜோடியான அருண் விஷ்ணு மற்றும் அபர்ணா பாலன் 21-15, 21-10 என்ற கணக்கில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தருண் கோனா ஜோடி 23-25, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த ரிக்கி விதன்டோ மற்றும் பஸ்பிதா ரிச்சி திலி ஜோடியை வீழ்த்தியது. இந்திய ஜோடி, முதல் செட்டை இழந்து பின்னும், அடுத்த இரு செட்களை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி, தங்களது அடுத்த சுற்றில் இங்கிலாந்து ஜோடியை சந்திக்கிறது.

கலப்பு இரட்டையர் வெற்றியைத் தொடர்ந்து மகளிர் இரட்டையர் பிரிவிலும் அஸ்வினி ஜோடி வெற்றி பெற்றது.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

துபை டென்னிஸ்: சோம்தேவ் தோல்வி

துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் தோல்வியைத் தழுவினார்.

புதன்கிழமை நடைபெற்ற 2-ம் சுற்று ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவின் ஜுவான் மார்ட்டினுடன் மோதினார் சோம்தேவ்.

உலகின் முன்னணி வீரரான மார்ட்டின் எளிதில் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். 

ஆனால் அதற்கு சோம்தேவ் தடையாக இருந்தார். இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. 

இறுதியில் கடும் போராட்டத்துக்குப் பின் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் மார்ட்டின் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் தாம்ஸ் பெர்டிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டாபியஸ் கெம்கேவை தோற்கடித்தார்.

2-ம் சுற்று ஆட்டத்தின்போது, ஆர்ஜெண்டீனாவின் கால்பந்து ஜாம்பவானான மரடோனா டென்னிஸ் விளையாடினார். சோம்தேவ், மார்ட்டின் ஆட்டம் முடிவடைந்த பின், மார்ட்டினுடன் டென்னிஸ் விளையாடினார் மரடோனா. கால்பந்து வீரரான மரடோனா, டென்னிஸ் மட்டையைப் பிடித்து விளையாடியது, ரசிகர்களை வியக்க வைத்தது. மார்டீனும், ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஐடிஎஃப் டென்னிஸ்: காலிறுதியில் 5 இந்தியர்கள்

சர்வதேச டென்னிஸ் சம்மேளன (ஐடிஎஃப்) ஆடவர் பியூச்சர்ஸ் போட்டியின் காலிறுதிக்கு 5 இந்தியர்கள் முன்னேறியுள்ளனர்.

இப்போட்டிகள் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. 

ஆடவர் ஒற்றையர் போட்டியில் எல்வின் அந்தோனி, ரஞ்சித் விராலி-முருகேசன், என். விஜய் சுந்தர் பிரசாத், ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜயந்த் மாலிக் ஆகிய 5 வீரர்கள் இப்போட்டியின் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இரட்டையர் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 6-1, 4-6 (10-7) என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த எல்வின் அந்தோனி, ஃபேரிஸ் முகமது ஜோடியை வீழ்த்தியது



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Wednesday 27 February 2013

துபை ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் சோம்தேவ்

துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் சோம்தேவ் முன்னேறியுள்ளார். துபையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சோம்தேவ் தனது முதல் சுற்றில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் இகர் குனிட்ஸினை தோற்கடித்தார்.

புதன்கிழமை நடைபெறவுள்ள 2-வது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டினை சந்திக்கிறார் சோம்தேவ். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜுவான் மார்ட்டினை சந்திப்பதால் சோம்தேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

சர்வதேச செஸ்: கெல்பான்டுடன் டிரா செய்தார் ஆனந்த்

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 3-வது சுற்றில் இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இப் போட்டி நடைபெற்று வருகிறது. 4 வீரர்கள் பங்கேற்றுள்ள இப் போட்டி டபுள் ரவுண்டு ராபின் முறையில் நடைபெற்று வருகிறது. 

இதில் முதல் இரு சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

அதில் ஓர் ஆட்டத்தில் ஆனந்தும், கெல்பான்டும் மோதினர். முதல் வெற்றியை பெறுவதற்காக கெல்பான்ட் கடுமையாகப் போராடினார். எனினும் ஆனந்த் சிறப்பாக காய்களை நகர்த்தியதால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. 

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கடும் போராட்டத்துக்குப் பிறகு கெல்பான்டை வீழ்த்தி ஆனந்த் 5-வது முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் இத்தாலியின் ஃபேபியானோ கருணா-முன்னாள் உலக சாம்பியனான ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோருக்கு இடையிலான மற்றொரு ஆட்டமும் டிராவில் முடிந்தது. 

தற்போது 3 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் 4 வீரர்களும் தலா 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு 2-வது ரவுண்டு ராபின் சுற்று தொடங்கவுள்ளது.




- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Monday 25 February 2013

உலகின் மூத்த மாரத்தான் வீரர் ஃபுஜா சிங் ஓய்வு பெற்றார்

உலகின் மூத்த மாரத்தான் வீரர் ஃபுஜா சிங் (101), ஹாங்காங்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

இந்தியாவில் பிறந்தவரான இவர், இப்போது லண்டனில் வசித்து வருகிறார். "டர்பேனுடு டொர்னாடோ' என்று அழைக்கப்படும் ஃபுஜா சிங், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹாங்காங் மாரத்தான் போட்டியின் 10 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 32 நிமிடங்கள் மற்றும் 28 விநாடிகளில் கடந்தார்.

போட்டி முடிந்த பின் தனது நீண்ட பயணம் குறித்து ஃபுஜா சிங் கூறியது: இப்போது மிக்க மகிழ்ச்சியுடன் உள்ளேன். ஓடுவதால் எந்த உடல் பாதிப்பும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஓடும்போது நன்கு இயங்குவதாக உணர்கிறேன். 

ஆனால், இப்போது அவ்வாறு இருப்பதில்லை. ஓடும்போது சோர்வு ஏற்படுகிறது. ஓய்வு பெறும் இந்நாளை என்னால் மறக்க முடியாது. ஆனால், நற்பணிகளுக்கு பணம் திரட்டுவதற்காக எனது ஓட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

1999-ம் ஆண்டு முதல் ஓடத் தொடங்கிய இவர், ஆங்கிலம் பேசத் தெரியாதது வருத்தம் அளிப்பதாக ஒருமுறை தெரிவித்தார். வரும் ஏப்ரல் 1-ம் தேதி, இவர் 102 வயதைத் தொடுகிறார். டொர்னாடோவில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற முழு மாரத்தான் போட்டியில் இவர் பங்கேற்றார். 

இதன்மூலம் இப்போட்டியில் பங்கேற்ற அதிக வயதுடையவர் என்ற பெருமையை ஃபுஜா சிங் பெற்றார். ஆனால், முறையான பிறப்புச் சான்றிதழ் இன்மையால் இவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஏடிபி ஓபன்: போபண்ணா ஜோடி சாம்பியன்

ஏடிபி ஓபன் 13 பட்டத்துக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, பிரிட்டனின் ஃபிளெமிங் ஜோடி பட்டம் வென்றது.

பிரான்ஸின் மார்சேல் நகரில் இப்போட்டி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அஸிம்-உல்-ஹக் குரேஷி, ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை போபண்ணா
ஜோடி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 6-4, 7-6(3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் போபண்ணா ஜோடிக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. மேலும், போபண்ணா, ஃபிளெமிங் ஆகியோர் தலா 250 தரவரிசைப் புள்ளிகளையும் பெற்றனர்.

இத்துடன், இரட்டையர் பிரிவில் போபண்ணா எட்டு ஏடிபி ஓபன் பட்டங்களை வென்றுள்ளார்.


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஆசிய ஸ்குவாஷ்: தங்கம் வென்றது மகளிர் அணி

தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் தங்கம் வென்றனர்.

அதே சமயம், இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவிய இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட்டது.

இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆடவர் மற்றும் மகளிர் என இரு அணிகளும் முன்னேறியிருந்தன.

இறுதிச்சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்திய மகளிர் அணி ஹாங்காங் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.

அதே சமயம், பாகிஸ்தான் அணியுடன் மோதிய ஆடவர் அணியினர் 0-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினர். இதனால் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Sunday 24 February 2013

ஏடிபி ஓபன்: அரையிறுதியில் போபண்ணா ஜோடி

ஏடிபி ஓபன் 13 டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா, பிரிட்டனின் ஃபிளெமிங் ஜோடி முன்னேறியுள்ளது.

பிரான்ஸின் மார்சேல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதியில் போபண்ணா ஜோடி 6-3, 6-7(2), 10-7 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேம்ஸ் செரிடனி, கனடாவின் அடில் ஷம்ஸ்தீன் ஜோடியை வீழ்த்தியது.

இந்த ஜோடி, தங்களது அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜூலியன் நோலி, ஸ்லோவேகியாவின் ஃபிலிப் போலஸ்க் ஜோடியுடன் மோதவுள்ளது.

இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது சுற்றில் விளையாடிய இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், ஆஸ்திரேலியாவின் பெர்னட் டாமிக்குடன் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.



- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஆசிய ஸ்குவாஷ்: இறுதிச்சுற்றில் இந்தியா

தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன.

சியோலில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆடவர் அணி 2-1 என்ற கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

அதேபோல் மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி
பெற்றது.

இரண்டாவது முறையாக, ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் ஆசிய ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. 

இதற்கு முன் 2003-ம் ஆண்டு இஸ்லாமாபாதில் நடைபெற்ற போட்டியில் இரு பிரிவுகளும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

துபை டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்

துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸô, அமெரிக்காவின் மேட்டெக் சான்ட்சாஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
துபையில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் நடியா பெட்ரோவா, கத்ரினா ஸ்ரிபட்னிக் ஜோடியுடன் சானியா ஜோடி பலப்பரீட்சை
நடத்தியது.

1 மணி நேரம் 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி 6-4, 2-6, 10-7 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
 
இந்த சீசனில் சானியா வெல்லும் இரண்டாவது பட்டம் இதுவாகும். இத்துடன் ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் 16-வது பட்டங்களை அவர் வென்றுள்ளார்



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Saturday 23 February 2013

கிரென்கே செஸ்: ஆனந்த் சாம்பியன்

ஜெர்மனியின் படேன்-படேன் நகரில் நடைபெற்ற கிரென்கே கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.

கடைசிச் சுற்றில் ஜெர்மனியின் ஆர்காடிஜ் நைடிட்ஜை வீழ்த்தியதன் மூலம் ஆனந்த் சாம்பியன் ஆனார். இந்த ஆண்டில் அவர் வெல்லும் முதல் பட்டம் இது.

11 சுற்றுகளைக் கொண்ட இப் போட்டியில் 10 சுற்றுகளின் முடிவில் ஆனந்த், இத்தாலியின் ஃபேபியானோ கருணா ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தனர். இந்த நிலையில் கடைசிச் சுற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆனந்த், ஜெர்மனியின் ஆர்காடிஜை வீழ்த்தினார். 

எனினும் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்கு, ஃபேபியானோ கருணா-ஜெர்மனியின் டேனியல் ஃபிரிட்மேன் இடையிலான ஆட்டம் முடியும் வரை ஆனந்த் காத்திருக்க நேர்ந்தது. ஃபேபியானோ-டேனியல் ஆட்டம் டிராவில் முடியவே, ஆனந்தின் சாம்பியன் பட்டம் உறுதியானது. 

இந்தப் போட்டியில் 10 சுற்றுகள் வரை சிறப்பாக விளையாடிய ஃபேபியானோ, கடைசிச் சுற்றில் காய்களை நகர்த்துவதில் தவறு செய்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஒருவேளை இந்த சுற்றில் ஃபேபியானோ வெற்றி பெற்றிருந்தால், அவருக்கும், ஆனந்துக்கும் இடையில் "டை பிரேக்கர்' சுற்று கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். 

ஃபேபியானோ 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ், ஜெர்மனியின் ஜார்ஜ் மேயர் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், நைடிட்ஜ் 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், ஃபிரிட்மேன் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக ஹாக்கி லீக்!

தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய மகளிர் உலக ஹாக்கி லீக் 2-வது சுற்றில் மோதிய இந்திய - கஜகஸ்தான் வீராங்கனைகள்.

இந்த ஆட்டத்தில் இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Friday 22 February 2013

பாட்மிண்டன் தரவரிசை: 2-வது இடத்தில் சாய்னா

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார். அதேநேரத்தில் இந்திய வீரர் காஷ்யப், இரண்டு இடங்களை இழந்து தற்போது 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 

கடந்த ஒரு மாதமாக காஷ்யப் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால் அவர் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 16-வது இடத்தில் உள்ளார்.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக