கவ்லூன், ஹாங்காங்: உலக சூப்பர்சீரீஸ் ஹாங்காங் ஓபன் இறகுப்பந்து போட்டி இன்று கவ்லூன் நகரில் துவங்கியது. முதல் சுற்றுப்போட்டிகளில் இந்தியாவிற்க்கு இன்று வெற்றிகள் குறைவாகவும் தோல்விகள் அதிகமாகவும் கிடைத்தன.
காலையில் முதலில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தருண் கோனா மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை சீனாவின் சூ சென் மற்றும் மா ஜின் இணையிடம் 15-21, 16-21 என்ற நேர் புள்ளிகளில் , முப்பது நிமிடத்தில் தோற்றது.அடுத்து நடைபெற்ற மற்றுமொரு கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ப்ரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் சிக்கி ரெட்டி இணை அமெரிக்காவின் ஃபிலிப் சூவ் மற்றும் ஜெமி சுமந்தி இணையை 21-19,21-15 என்ற நேர் புள்ளிகளில், 24 நிமிடங்களில் வென்றது.
பின்னர் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் இந்தோனேசியாவின் அப்ரில்லா யுசுந்தரியை 22-20, 21-8 என்ற நேர் புள்ளிகளில் 33 நிமிடங்களில் வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் இவர் சீனாவின் வாங் லின் உடன் நாளை மோத இருக்கிறார்.
ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தருண் கோனா மற்றும் அருண் விஷ்ணு இணை இங்கிலாந்தின் க்ரிஸ் அட்காக் மற்றும் அண்ட்ரூ எல்லீஸ் இணையிடம் 18-21, 14-21 என்ற நேர் புள்ளிகளில் தோற்றது. இந்த ஆட்டம் சுமார் 31 நிமிடங்கள் நீடித்தது.
ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜயராம், சீனாவின் வாங் ஷெங்மின்னை 22-20,23-21 என்ற புள்ளிக்கணக்கில் கடுமையாகப் போராடி வென்றார். 35 நிமிடங்கள் இந்தப்போட்டி நடைபெற்றது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் காஷ்யப் பாருபள்ளி, உலகின் ஏழாம் நிலை வீரர், டென்மார்க்கின் ஜேன் ஓ ஜோர்கென்சனை 24-22, 20-22, 22-20 என்ற புள்ளி கணக்கில் கடும் போராட்டத்துக்குப்பின் வென்றார். இரண்டாவது ஆட்டதில் காஷ்யப் 19-15 என்ற முன்னிலை பெற்றிருந்தபோதும் 20-22 என்ற புள்ளிக்கணக்கில் அந்த ஆட்டத்தை இழந்ததால் மூன்றாவது ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. இந்த ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்றது.
மாலையில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஃப்ரான் குர்னியவன் மற்றும் செண்டி புஷ்பா இராவதி இணை இந்தியாவின் அக்ஷய் திவால்கர் மற்றும் ப்ரத்னியா கத்ரே இணையை 21-18, 23-21 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ரிக்கி விடியண்ட்டோ மற்றும் புஷ்பிதா ரிசி திலி இணை இந்தியாவின் அருண் விஷ்ணு மற்றும் அபர்ணா பாலன் இணையை 21-13, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் நாளைய நட்சத்திரம், பி.வி.சிந்து இந்தோனேசியாவின் பெலேட்ரிக்ஸ் மனுபுடி யிடம் 12-21,21-18,15-21 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறினார்.
ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தோனேசியாவின் ஆல்வண்ட் யுலியண்டோ சந்த்ரா மற்றும் மார்கிஸ் கிடோ இணை இந்தியாவின் மனு அத்ரி மற்றும் சுமீத் ரெட்டி இணையை 11-21,21-11,21-15 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ப்ரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் அக்சய் திவால்கர் இணை இந்தோனேசியாவின் ஹஃபிஸ் ஃபைசல் மற்றும் புத்ரா இகா ரோமா இணையை 21-16, 21-23, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குத்தகுதி பெற்றது.
பெண்கள் இரட்டையர் போட்டியில் சீனாவின் வாங் சியோலி மற்றும் யூ யங் இணை இந்தியாவின் அபர்ணா பாலன் மற்றும் சிக்கி ரெட்டியை வெறும் பதினைந்தே நிமிடங்களில் 21-3, 21-7 என்று எளிதில் வீழ்த்தியது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ப்ரத்னவா கத்ரே மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை ஃப்ரான்ஸ் நாட்டின் ஆட்ரே ஃபோண்டைன் மற்றும் எமிலி லீஃபல் இணையை 21-10, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக