அஹமதாபாத்: அரியானா அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 408 ஓட்டங்களைப்பெற்றது. இதில் பீட்டர்சன் 110, குக் 94, நிக் காம்ப்டன் மற்றும் அயன் பெல் ஆகியோர் அரைநூறை பெற்றனர்.
அரியானாவின் மிக மிக மோசமான பந்துவீச்சில் பயிற்சி பெறும் இங்கிலாந்து அணி, முதல் போட்டியில் உலகத்தரம் மிக்க இந்திய சுழல்பந்துவீச்சை எதிர் கொள்ளப்போகிறது என்பது சிந்தனைக்குரியது! இன்றைய அரியானா அணியின் பந்துவீச்சைப்பார்த்தபோது, எங்கள் தெருவில் விளையாடும் சிறுவர்கள், இதை விட சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.
பொதுவாகவே பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்படுவதன் நோக்கம், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி, உள்நாட்டின் காலநிலை, ஆட்டக்களம், பந்தின் வேகம் மற்றும் சுழலும் தன்மை மற்றும் இன்னும் சில நிலைமைகளை புரிந்துகொள்வதற்காகவே! ஆனால் கடந்த இரண்டு போட்டிகளையும் பார்க்கும் போது இங்கிலாந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், இந்த வாய்ப்புகளை வழங்கிவிடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருப்பதாகத்தோன்றுகிறது. முதல் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து அணியின் கண்ணில் கூட காட்டவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியிலும், அஸ்வின், ஹர்பஜன்,பியுஸ் சாவ்லா, ப்ரக்யான் ஓஜா ஆகியோரை களமிறக்காமலே இங்கிலாந்திற்க்கு பயிற்சியளிக்கிறது இந்தியா. இதில் இங்கிலாந்து அணியினர், இந்திய அணியின் பந்துவீச்சை படிக்க இயலாமல் போவது ஒருபக்கம் இருந்தாலும், அதேவேளையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்தின் மட்டைத்திறன் பற்றி அறியமுடியாமல் போவதை மறுக்க முடியாது.
இந்நிலையில், கெவின் பீட்டர்சனின் அதிரடி நூறும், அணித்தலைவர் அலிஸ்டர் குக்கின் 94 உம், நிக் காம்ப்டன் மற்றும் அயன் பெல்லின் ஐம்பதுகளும் இங்கிலாந்து அணிக்கு எந்த வகையில் கைகொடுக்கும் என்பது முதல் ஐந்து நாள் போட்டி துவங்கியவுடன் தான் தெரியும். இந்தியாவின் தந்திரம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்..
-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.